அநுராதபுரத்தில் பௌத்த விகாரை ஒன்றுக்குள் பிரவேசித்து பின்னர் விகாரை அருகே உள்ள காட்டுப் பகுதிக்குள் சென்று மறைந்த மர்ம நபர் பற்றிய வெளிவந்த தகவலால் அப்பகுதி மக்களிடையே அச்சநிலை ஏற்பட்டுள்ளது.
அநுராதபுரம் மாவட்டம் மீகலேவ பகுதியிலுள்ள ரஜமகா விகாரைக்குள் பௌத்த பிக்குகள் அணியும் சீருடையுடன் நபர் ஒருவர் நேற்று சனிக்க்கிழமை மாலை சென்று சிறிது நேரத்தில் விகாரையிலிருந்து வெளியேறி அங்கிருந்த காட்டுப்பகுதிக்குள் சென்றுவிட்டார்.
இதுகுறித்து சந்தேகமடைந்த மக்கள் சிலர் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். தொடர்ந்து விகாரைக்கு சென்ற மீகலேவ பொலிஸார் விகாராதிபதியிடம் வாக்குமூலம் பதிவுசெய்த அதேவேளை, கிராம மக்களுடன் இணைந்து காட்டுப்பகுதியில் நேற்று முழுவதும் பாரிய தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இன்றும் அந்த தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல் தெரிவிக்கின்றது. மேற்படி சம்பவம் இடம்பெற்றதை தொடர்ந்து அப்பிரதேசத்து மக்களிடையே சற்று அச்சநிலையும் சலசலப்பும் ஏற்பட்டிருப்பதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.