இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை கோரத் தாண்டவமாடி வரும் நிலையில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலம் மராட்டியம் என சொல்லப்படுகின்றது. அங்கு தினசரி பாதிப்பு 55 ஆயிரத்தைத் தாண்டி பதிவாகியுள்ளது.
தற்போது 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. அத்துடன் தலைநகர் மும்பை மருத்துவமனைகளில் தொற்று பாதித்த நோயாளிகளுக்கான படுக்கைகள் 80 சதவீதம் நிரம்பி விட்டன. தீவிர சிகிச்சைப்பிரிவு மற்றும் வெண்டிலேட்டர் வசதியுள்ள படுக்கைகளில் 98 சதவீதம் நிரம்பி விட்டன.
மேலும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் பற்றாக்குறையும் நிலவுகிறது. சில நாட்களுக்கு முன்பு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 2 தனியார் மருத்துவமனைகளில் 10 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் மும்பையில் தற்போது ஒருவித அசாதாரணமான சூழ்நிலை நிலவி வரும் வேளையில் தொற்றுநோய் நிபுணரான டாக்டர் தி்ருப்தி கிலாடா (Dr. Satisfaction Gilada) கண்ணீர் ததும்பப் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.
அதில், ”ஒரு மருத்துவராக இதைச் சொல்வதற்குக் கஷ்டமாக உள்ளது. ஆனால் நாங்கள் உதவியற்றவர்களாக இருக்கிறோம். இதுபோன்ற ஒரு சூழ்நிலையை இதற்கு முன்பு பார்த்தது இல்லை. மக்கள் பீதியடைந்துள்ளனர். நாங்கள் அதிகமான நோயாளிகளைக் கவனிக்க வேண்டியுள்ளது. படுக்கைகள் இல்லாததால் மோசமான நிலையிலிருக்கும் நோயாளிகள் வீட்டில் சிகிச்சை பெறுகிறார்கள். முதலில் நீங்கள் அனைவரும் தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள். உங்களுக்கு கொரோனா வரவில்லை என்றாலோ அல்லது கொரோனாவிலிருந்து மீண்டு வந்திருந்தாலோ நீங்கள் ஒரு சூப்பர் ஹீரோ என்று நினைக்க வேண்டாம் அல்லது உங்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி இருப்பதாக நினைக்க வேண்டாம்.
பல இளைஞர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளார்கள். அவர்களுக்கு நாங்கள் உதவ முடியாது. கொரோனா எல்லா இடங்களிலும் உள்ளது. அதனால் முககவசம் அணியாமல் வெளியே செல்லாதீர்கள். தகுதியுள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். தடுப்பூசி கடுமையான பாதிப்பைத் தடுக்க உதவும்” என உருக்கமாகப் பேசியுள்ளார்.
இந்நிலையில் கொரோனா தீவிரமாகப் பரவி வரும் இந்த நேரத்திலும் சிலர் மாஸ்க் அணியாமலும், கொரோனா என்று ஒரு வியாதியே கிடையாது என விதண்டாவாதம் பேசிக் கொண்டு இருப்பதை விடுத்து மருத்துவர்கள் படும் கஷ்டத்தைச் சிறிதேனும் நினைத்துப் பார்க்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.