கோவிட் வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், அரச நிறுவனங்களில் பணிப்புரியும் ஊழியர்களை வேலைக்கு அழைக்கும் விதம் பற்றி அடுத்த வாரம் அறிவிப்பதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள பொது வழிக்காட்டல்களை அரச நிறுவனங்களில் எப்படி செயற்படுத்துவது என்பது குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது சம்பந்தமாக ஜனாதிபதியுடன் நேற்று கலந்துரையாடியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கோவிட் வைரஸ் பரவலின் மூன்றாவது அலையை அடிப்படையாக கொண்டு எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி வரை பொதுவான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய விதம் குறித்து சுகாதார அமைச்சு நேற்று வழிக்காட்டல்களை வெளியிட்டிருந்தது.
அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தமது அலுவலங்களில் தேவையான குறைந்தளவான ஊழியர்களுடன் செயற்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முடிந்தளவு வீடுகளில் இருந்து பணிப்புரியவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.