அனைவரும் இணைந்து யாழில் கோவிட் தொற்றை கட்டுப்படுத்துவோம்!

அனைவரும் இணைந்து யாழ்ப்பாணத்தில் கோவிட் தொற்றினை கட்டுப்படுத்துவோம் என யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற மாவட்ட விசேட கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில், மாவட்ட சுகாதார பணிப்பாளர் மற்றும் யாழ் மாவட்டத்தில் செயற்படும் சுகாதார அதிகாரிகள் மற்றும் சுகாதார பிரிவினருடன் இணைந்து இன்றைய தினம் விசேட கோவிட் ஒழிப்பு தொடர்பான கூட்டத்தை கூட்டி இருந்தோம்.

தற்போது நாட்டில் அதிதீவிரமாக பரவும் கோவிட் நோயினை கட்டுப்படுத்துவதற்கு தேசிய ரீதியாக எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்தல்.

அதேபோல் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளல், வடக்கு மாகாணத்தில் கோவிட் கட்டுப்பாட்டினை எவ்வாறு பேணுவது தொடர்பில் இன்றைய தினம் ஆராய்ந்த்தோடு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் தொடர்பிலும் ஆராய்ந்தோம்.

விசேடமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு மக்களை எவ்வாறு இந்த நோயிலிருந்து பாதுகாப்பது தொடர்பாகவும் ஆராய்ந்தோம், அத்தோடு எவ்வாறான நடைமுறைகளைக் கையாள்வதன் மூலம் இந்த தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க முடியும் என்பது தொடர்பிலும் ஆராய்ந்தோம்.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கு சுகாதார பரிசோதகர்கள் அத்தோடு யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்களுக்கு ஏற்றவாறாக பொது சுகாதார பரிசோதகர்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தல் பொது சந்தை, வியாபார நிலையங்கள், மற்றும் பொது மக்கள் ஒன்று கூடும் இடங்களில் பொதுமக்களின் ஒன்றுகூடல்களை கட்டுப்படுத்த உரிய செயற்பாடுகளை மேற்கொள்ளல் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்தோம்.

மாகாண சுகாதார பணிப்பாளர் மற்றும் அரச அதிபரின் வேண்டுகோளுக்கிணங்கி மாவட்டத்தில் பொதுமக்கள் ஒன்று கூடுவதை தடுப்பதற்குரிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாகவும் முடிவெடுத்திருக்கிறோம்.

கிராமங்கள் மற்றும் பிரதேச செயலக மட்டங்களில் விசேட கூட்டங்களை கூட்டி கிராம மட்ட சுகாதார குழுக்களின் செயற்பாடுகளை அதிகரிப்பதன் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, பொதுமக்களை சுகாதார நடைமுறை பின்பற்ற வைப்பதன் மூலம் இந்த தொற்றினை கட்டுப்படுத்தலாம் ஏற்கனவே இராணுவத்தினரால் யாழ்ப்பாண நகரப் பகுதியில் கிருமித்தொற்று நீக்கப்பட்டு சுத்தம் செய்யப் பட்டுள்ளது.

அத்தோடு எம்மால் தொடர்ச்சியாக யாழ்ப்பாண நகரப் பகுதியில் இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்படும். மேலும் பல இடங்களினை இன்றைய தினம் அடையாளப் படுத்தி உள்ளார்கள், அந்த இடங்களும் விரைவில் இராணுவத்தினரால் சுத்தம் செய்யப்பட்டு கிருமித் தொற்று நீக்கும் வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படும்.

யாழ் நகரில் வாகனங்களை நிறுத்தும் இடத்தை வேறு இடங்களில் வாகன தரிப்பிடத்தை மாற்றுவதற்கும் இன்றைய தினம் தீர்மானித்தோம்.

அத்தோடு தீவுப்பகுதியில் அதாவது கடற்கரையை அண்டிய பகுதியில் உள்ள மக்கள் மீனவ குடும்பங்கள் சிலரது செயற்பாடுகளின் மூலம் தென்னிலங்கை மீனவர்களின் தொடர்புகளை பேணுவதன் காரணமாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் கோவிட் தீவிரமடைய கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.

எனவே அதனை தடுப்பதற்குரிய வழிமுறை தொடர்பில் இன்றைய தினம் ஆராய்ந்திருந்தோம், யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள மீனவர்களுக்கு நான் ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்,

நீங்கள் தயவுசெய்து யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களை பாதுகாப்பதற்காக தென்னிந்திய மீனவர்களோடு தொடர்புகளை பேணாதீர்கள். அவ்வாறு தொடர்பினை பேணிகொள்வதன் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்தில் கோவிட் தீவிரமடைய கூடிய நிலை காணப்படுகின்றது.

அத்தோடு இந்தியாவில் தற்பொழுது நிலைமை தீவிரமாக அதிகரித்து காணப்படுகின்றது. அந்த வைரஸ் இங்கு பரவினால்தொற்று தீவிரமடையும் எனவே அந்த விடயம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous articleஇலங்கையில் பரவும் கோவிட் தொற்றின் புதிய மரபணு!
Next articleயாழ்.பருத்தித்துறையில் ஆசிரியையை மோதி தள்ளிவிட்டு தப்பி ஓடிய டிப்பர் சாரதி,CCTV காட்சி வெளியானதால் 3 நாட்களின் பின் பொலிஸார் நடவடிக்கை!