விண்ணில் சீனா செலுத்திய லாங் மார்ச் 5பி ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்து பூமியை சுற்றிக்கொண்டு இருப்பதாகவும் எப்போது வேண்டுமானாலும் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
விண்வெளி குறித்த ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி நிலையம் புவிவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் இடம் பெற்றுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் சீனா இடம் பெறவில்லை.
எனவே, தங்களுக்கான விணிவெளி நிலையத்தை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது. பூமிக்கு மேலே 370 கிலோ மீட்டர் உயரத்தில் இந்த நிலையம் அமைக்கப்படவுள்ளது. தாங்கள் கட்டும் புதிய விண்வெளி நிலையத்தின் முதல் தொகுதியை லாங் மார்ச் 5பி என்ற ராக்கெட் மூலம் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் சீனா விண்ணில் ஏவியது. இந்த தொகுதியின் எடை 21 டன் என கூறப்படுகிறது.
இந்த ராக்கெட்டின் பாகம் தற்போது கட்டுப்பாட்டை இழந்து பூமியை சுற்றி வருகிறது. அடுத்த சில நாட்களில் எப்போது வேண்டுமானாலும் இந்த ராக்கெட் பாகம் பூமியில் விழக்கூடும் என ’ஸ்பேஸ் நியூஸ்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
100 அடி உயரமும் 16 அடி அகலமும் உடைந்த இந்த ராக்கெட்டின் பாகம் பூமிக்குள் நுழையும்போது, வளிமண்டல உராய்வு காரணமாக எரிந்து சிதைந்து விடும். எனினும் அதிகளவிலான சிதைவுகள் பூமியில் விழக்கூடிய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனினும், எங்கு விழும், எப்போது விழும் என்பதை கணிக்கக் கூடிய சூழல் தற்போது இல்லை என்றும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது .
சீனாவின் ராக்கெட் இது போன்று பூமியில் விழுவது புதிதல்ல. கடந்த ஆண்டு மே மாதம், சீனாவின் லாங் மார்ச் 5-பி ராக்கெட் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்து வடமேற்கு ஆப்பிரிக்காவில் மவுரித்தேனியா கடல் பகுதியில் விழுந்தது.
அதற்கு முன்பாக, டியாங்காங்-1 என்ற விண்வெளி ஆய்வு நிலையத்தை 2011ஆம் ஆண்டு சீனா விண்வெளிக்கு அனுப்பியது. 2016ம் ஆண்டு விண்வெளி நிலையம் மீதான தங்களின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக சீனா அறிவித்தது. இதையடுத்து 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் டியாங்காங் விண்வெளி நிலையம் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்து வெடித்து சிதறியது. அதன் சிதைவுகள் தென் பசிபிக் கடலில் விழுந்தன.