மகளுடன் தனியாக வாழ்ந்துவந்த வழக்கறிஞர் : யோகா டீச்சரை கொலை செய்து புதைத்த கொடூரம்

வழக்கறிஞர் ஒருவர் தன்னுடன் தொடர்பில் இருந்த பெண்ணை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்ற வழக்கறிஞர் தனது மனைவியை விவாகரத்து பெற்று 10 வயது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

அவர் வசிக்கும் அதே பகுதியில் சித்ராதேவி என்ற யோகா ஆசிரியையும் கணவரை பிரிந்து வாழ்ந்துள்ள நிலையில், ஹரிகிருஷ்ணனின் மகள் யோகா பயில்வதற்கு அவரிடம் சென்றுள்ளார்.

மகளை யோகா வகுப்பிற்கு அனுப்ப வந்த வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணனுக்கும் சித்ராவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளதுடன், இருவரும் தனியாக பேசி வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 2ம்தேதி சித்ராதேவி இரு சக்கர வாகனத்துடன் மாயமானதைத் தொடர்ந்து சித்ராவின் தந்தை காவல்நிலையத்தில் மகளைக் காணவில்லை என புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தேர்தலை காரணம் காட்டி வழக்கை கிடப்பில் போட்டுள்ளனர்.

இந்த நிலையில் திடீரென வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதையடுத்து, அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஹரிகிருஷ்ணன் உடலை கைப்பற்றியதுடன் அவர் எழுதிவைத்த கடிதத்தினையும் கைப்பற்றியுள்ளனர்.

அந்த கடிதத்தில் சித்ராதேவியை தானே கொலை செய்து குளியலறையில் புதைத்து இருப்பதாகவும் இது அனைத்தும் தானே செய்ததாகவும், தனது சாவுக்கு வேறு யாரும் காரணம் அல்ல எனவும் கொலை செய்த குற்றத்தை பொறுக்க முடியாமல், தனக்குத்தானே தண்டனையை கொடுத்துக் கொண்டதாகவும் எழுதியிருந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Previous articleதண்ணீரில் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்த இளம் பெண்ணை காப்பாற்ற சென்ற மாணவன் பரிதாபமாக பலி!
Next articleகோவிட் நோயாளிகளை சிகிச்சை நிலையத்திற்கு அழைத்து செல்வதற்கு போதுமான அளவு வாகனங்கள் இல்லாமல் திண்டாட்டம்!