கொரோனா தொற்றுக்குள்ளான மாமனாரை முதுகில் சுமந்து சென்ற மருமகள்!

கொரோனா தொற்று பாதித்த மாமனாரை வைத்தியசாலையில் சேர்க்க முதுகில் சுமந்து சென்ற மருமகளை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அசாம் மாநிலம் ராஹாவில் உள்ள பாட்டிகவானில் வசித்து வருபவர் 75 வயதுடைய துலேஷ்வர் தாஸ். இவருடைய மகன் சூரஜ். திருமணமாகி மனைவி நிகாரிகாவை வீட்டில் விட்டு விட்டு வேலை விஷயமாக வெளியூர் சென்றுவிட்டார்.

இதனால் வீட்டில் மாமனாரை, நிகாரிகா கவனித்து வந்தார்.

இதற்கிடையே துலேஷ்வர் தாசுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

எனினும், ஊரடங்கு நேரத்தில் போக்குவரத்து இல்லாததால் மாமனாரை எப்படி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வது என்று நிகாரிகா யோசித்தார்.

தாமதித்தால் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்த அவர், சிறிதும் தாமதிக்காமல் கொரோனா பாதித்த தன் மாமனாரை முதுகில் சுமந்து கிடைத்த வாகனம் மூலம் அருகில் இருந்த வைத்தியசாலையில் கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது..

இந்நிலையில் மாமனாரை முதுகில் சுமந்து வந்ததால் நிகாரிகாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் அவருக்கும் தொற்று உறுதியானது. அவரை வீட்டு தனிமையில் இருக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

தனக்கு கொரோனா வந்தாலும் பரவாயில்லை என்று தன்னலம் பாராமல் மாமனாரை தோளில் சுமந்து சென்று பொறுப்புடன் செயல்பட்ட நிகாரிகாவுக்கு வலைத்தளத்தில் பாராட்டு குவிகிறது.