வழிதடுமாறி பொன்னாலைக்கு சென்றிருந்த வயோதிப பெண் ஒருவரை பத்திரமாக உறவினர்களிடம் ஒப்படைத்த இளைஞர்கள்!

வழிதடுமாறி பொன்னாலைக்கு சென்றிருந்த வயோதிப பெண் ஒருவர் இன்று புதன்கிழமை காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். ஏழாலை தெற்கில் வசிக்கும் சிவபாதம் லீலாவதி (வயது-75) என்பவரே இவ்வாறு வழிதடுமாறி வந்தவராவார்.

குறித்த பெண் பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு பின்புறமாக, கடலுக்குள் இறங்கி நின்ற நிலையில் இன்று அதிகாலை 3.00 மணியளவில் இலங்கேஸ்வரன், பசுங்கிளிராசா ஆகிய இரு கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்டார்.

கௌவாட்டி எனப்படும் கடற் கற்கள் வெட்டிய சில காயங்களும் காலில் காணப்பட்டன. இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் மற்றும் பொன்னாலை கிராம சேவையாளர் ந.சிவரூபன், பிரதேச சபை உறுப்பினர் ஆகியோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள் அவரை உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடுகளை மேற்கொண்டனர். பொன்னாலை ஸ்ரீகண்ணன் சனசமூக நிலையத் தலைவர் செ.றதீஸ்வரன் மற்றும் உறுப்பினர்களும் இப்பணியில் இணைந்திருந்தனர்.

தமது இரு பிள்ளைகளும் வெளிநாட்டில் வசிக்கின்றனர் எனவும் தான் சொந்த வீட்டில் உறவினர்களுடன் வசிக்கின்றார் எனவும் கணவனின் ஓய்வூதியம் பெற்றுக்கொள்கின்றார் எனவும் குறித்த பெண்மணி தெரிவித்திருந்தார்.

குறித்த மூதாட்டி வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இன்று காலை 8.00 மணியளவில் அவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.