நாட்டில் திடீரென அதிகரித்த அரிசி விலை!

அனைத்து அரிசி வகைகளினதும் விலைகள் திடீரென அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றஞ்சுமத்துகின்றனர்.

மேலும் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு காணப்பட்ட விலையை விடவும், சில அரிசி வகைகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் கூறுகின்றனர்.

எனினும் இதன்படி, குறித்த அரிசி வகைகளின் விலைகள் 10 ரூபா முதல் 25 ரூபா வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிவப்பு மற்றும் வெள்ளை பச்சை அரிசி ஒரு கிலோகிராமின் விலை 120 ரூபா முதல் 128 ரூபா வர அதிகரித்துள்ளதுடன், ஒரு கிலோகிராம் நாடு அரிசியின் விலை 125 ரூபா முதல் 135 ரூபா வரை அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு கிலோகிராம் சம்பா அரிசியின் விலை 155 ரூபா முதல் 170 ரூபா வரை அதிகரித்துள்ளதுடன், ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசியின் விலை 220 ரூபா முதல் 230 ரூபா வரை அதிகரித்துள்ளதாக கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலுள்ள சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பொலன்னறுவை பிரதான அரிசி உற்பத்தி ஆலைகளின் விலைகளும் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, ஒரு கிலோகிராம் சம்பா அரிசியின் விலை 147 ரூபா முதல் 150 ரூபா வரை அதிகரித்துள்ளதுடன், ஒரு கிலோகிராம் நாடு அரிசியின் விலை 117 ரூபா முதல் 120 ரூபா வரை அதிகரித்துள்ளன.

மேலும் ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசியின் விலை 220 ரூபா வரை அதிகரித்துள்ளது.அத்தோடு வெள்ளை பச்சை மற்றும் சிவப்பு பச்சை ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 112 ரூபா முதல் 115 ரூபா வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், தற்போது கட்டுப்பாட்டு விலையையும் மீறி அரிசி விற்பனை செய்யப்பட்டு வருவதாக அரிசி உற்பத்தி நிறுவனமொன்றின் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

அத்தோடு லங்கா சதொச நிறுவனத்தில் ஒரு கிலோகிராம் வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசியின் விலை 93 ரூபாவிற்கும், ஒரு கிலோகிராம் நாடு அரிசியின் விலை 96 ரூபாவிற்கும் கொள்வனவு செய்ய முடியுமென அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

சதொச மொத்த விற்பனை நிலையத்தில் சம்பா அரிசி கிடையாது எனவும், 3 வகையான அரிசிகளே உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் பெரும்பாலான சதொச மொத்த விற்பனை நிலையங்களில் தேவையான அரிசி வகைகள் கிடையாது என நுகர்வோர் குறிப்பிடுகின்றனர்.