தடுப்பூசி போட்டால்தான் மாத சம்பளம்; அரசு ஊழியர்களுக்கு ஆட்சியர் உத்தரவு!

கொரோனாவுக்கு தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என மத்திய பிரதேசத்தில் மாவட்ட ஆட்சியர் ஒருவர் உத்தரவிட்டுள்ளது வைரலாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக உள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஒருபக்கம் மாநிலங்களுக்கு தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படும் நிலையில், மற்றொரு பக்கம் மக்கள் பலர் தடுப்பூசி போட தயக்கம் காட்டுவதும் தொடர்கிறது. இந்நிலையில் மக்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் மத்திய பிரதேசம் உஜ்ஜயினி மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட ஆட்சியர் அஷீஸ் சிங் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி உஜ்ஜயினி மாவட்டத்திற்குட்பட்ட அரசு அலுவலகங்களில் பணிபுரிவோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே மாத சம்பளம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் தடுப்பூசி சான்றிதழை சமர்பித்து சம்பளத்தை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் வைரலாகி வரும் நிலையில் பலரும் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.