தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் தொடர்பான திரைப்படம் வெளியீடு!

தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் என்றும் நீங்கா இடம் பெற்ற போராளியும், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை தோற்றுவித்த தலைவருமான திரு. வே. பிரபாகரன் அவர்களின் ஆரம்ப கால வரலாற்றை மையமாக வைத்து “மேதகு” என்ற தமிழ் திரைப்படத்தை, தமிழீழ திரைக்களம் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் உலக தமிழர்கள் நன்கொடை திரட்டல் வாயிலாக உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழர்களின் உரிமைகள் எப்படியெல்லாம் பறிக்கப்பட்டு அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதையும், அதனை தனது சிறு வயது முதல் பார்த்து கோபமடைந்த ஒரு சாதாரண இளைஞன் எப்படி தனது இனத்தின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தும் முடிவுக்கு வருகிறான் என்பதை பற்றியும் மிகவும் யதார்த்தமாகவும் நேர்த்தியாகவும் படம் பிடித்துக்காட்டியுள்ளார் இயக்குனர்.

இந்த திரைப்படத்தை கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் இயக்குனர் தி.கிட்டு. மேலும் ஒளிப்பதிவாளர் ரியாஸ், இசையமைப்பாளார் பிரவீன் குமார், கலை இயக்குனர் முஜிபூர் ரகுமான், படத்தொகுப்பு இளங்கோவன் மற்றும் திரை வண்ணம் விநாயகம் ஆகியோர் இணைந்து இத்திரைப்படத்திற்கு மெருகூட்டியுள்ளனர்.

இந்த திரைப்படத்தினை தஞ்சை குமார் மற்றும் சுமேசு இருவரும் தயாரிப்பு நிர்வாகத்தை மேற்பார்வையிட்டு இப்படைப்பினை உருவாக்கியுள்ளனர். தயாரிப்பு நிர்வாகத்தில் ஈஸ்வர் பாட்சா மற்றும் சதீசு இருவரும் துணை புரிந்துள்ளனர்.

இந்த திரைப்படம் ஜூன்-25 ஆம் தேதி வெளிவரவிருக்கிறது. இந்த மேதகு திரைப்படத்தின் சிறப்பு காட்சியினை பார்வையிட்ட நடிகர் சத்யராஜ், நடிகர் ராஜேஷ், இயக்குனர் பொன்வண்ணன், இயக்குனர் சேரன், இயக்குனர் அமீர், இயக்குனர் மாரி செல்வராஜ், இயக்குனர் கவுதமன், மற்றும் இயக்குனர் நவீன் ஆகியோர் இந்த திரைப்படத்தின் வெளியீட்டு அறிவிப்பினை தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பாராட்டி வாழ்த்துரை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களின் வரலாற்றை கலை வடிவில் கண்முன்னே படம் பிடித்துக் காட்டப்போகும் ‘மேதகு’ போன்ற பல்வேறு படைப்புகள் தொடர்ந்து வெளிவருவது பாராட்டுக்குரியது.