மனைவி கொல்லப்பட்ட சம்பவம்; யாழ் நபர் பரபரப்பு வாக்குமூலம்

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த மனைவியை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த இலங்கை தமிழர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த குமார் என்கிற லவேந்திரன் (49) கோவையில் வசித்து வருகிறார் . இவர் கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கவிதா (32). கவிதா முதல் கணவரை விட்டு பிரிந்து வந்து இரண்டாவதாக லவேந்திரனை திருமணம் செய்து உள்ள நிலையில் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இதேவேளை கவிதாவின் முதல் கணவருக்கு பிறந்த ஆண்குழந்தையும் தற்போது இவர்களிடம் தான் உள்ளது.

இந்த நிலையில் கவிதா அடிக்கடி செல்போனில் பேசுவதால், லவேந்திரனுக்கு சந்தேகம் எற்பட்டுள்ளது. சம்பவதன்று கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த லவேந்திரன் கிரிக்கெட் மட்டையால் கவிதாவை தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் மாறி, மாறி அடித்ததில் பலத்த காயம் ஏற்பட்ட கவிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததையடுத்து லவேந்திரன் அங்கிருந்து தப்பி சென்றார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் பவானிசாகரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் பதுங்கியிருந்த லவேந்திரனை கைது செய்தனர். கைதான லவேந்திரன் அளித்துள்ள வாக்குமூலத்தில்,

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் கவிதாவை திருமணம் செய்து கொண்டேன். ஆரம்பத்தில் எங்களது குடும்ப வாழ்க்கை எவ்வித பிரச்சினையும் இன்றி மிகவும் மகிழ்ச்சியாக சென்றது. மிகவும் மகிழ்ச்சியாக சென்ற எங்கள் திருமண வாழ்க்கை, என் மனவைியின் கையில் செல்போன் வந்த பின்னர் திசை மாறியது. எனது மனைவி வீட்டில் இருக்கும் நேரத்தில் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருப்பார்.

அவள் யாரிடம் பேசுகிறாள் என்பது குறித்து கேட்டால் சரியாக, பதில் சொல்ல மாட்டாள். இதனால் எனக்கு சந்தேகம் வரும். இப்படி எந்த நேரமும் செல்போனில் மூழ்கி கிடந்ததால் நான் அவளை கண்டித்தேன். குழந்தைகள் மீது கவனத்தை செலுத்தும்படி கூறினேன். ஒரு வாரத்திற்கு முன் செல்போனில் பேசுவது குறித்து கவிதாவை கண்டித்ததால் அவள், என்னிடம் கோவித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டாள். இந்நிலையில் எங்கே சென்றாள் என்று எனக்கு தெரியவில்லை.

எனினும் அவளின் இந்த செயல் மேலும் எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ஒருவாரம் கழித்து வீடு திரும்பிய கவிதாவிடம், எங்கு சென்றாய், நமக்கு குழந்தைகள் இருப்பது தெரியவில்லையா. நீ இல்லாமல் குழந்தைகள் மிகவும் கஷ்டப்பட்டனர் என்று கூறினேன். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரம் அடைந்த நான் கிரிக்கெட் மட்டையால் அவளை அடித்ததில் இறந்துவிட்டாள்.

மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த எங்கள் குடும்ப வாழ்க்கை மனைவியின் செல்போன் மோகத்தால் சிதைந்து விட்டது. நானும் சிறைக்கு சென்று விட்டால் எனது குழந்தைகள் தாய், தந்தை இன்றி தவிப்பார்கள். இதனை என்னால் தாங்க முடியவில்லை என கூறியுள்ளார். மேலும் கைதான லவேந்திரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.