மீட்கப்பட்ட மனித எச்சங்கள் காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தருடையதா?

குருவிட்ட காவல்நிலையத்தில் பணியாற்றி காணாமல் போயிருப்பதாக சந்தேகிக்கப்படும் ஒரு பொலிஸ் சார்ஜெண்டின் துப்பாக்கியும் உடல் எச்சங்களும் அண்மையில் புத்தளம், மதுரங்குளி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து முந்தல் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 30 ஆம் திகதி மாலை வயல் நிலத்தில் தீயை அணைக்கச் சென்ற ஒருவர், மனித எலும்புகள் மற்றும் 9 மிமீ கைத்துப்பாக்கியை கண்டுள்ளார். உடனயாக முந்தல் பொலிசாருக்கு தகவல் வழங்கினார்.

முந்தல் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்தனர். புத்தளம் மேலதிக மாவட்ட நீதிவான் ஏ. டி. அசேல டி சில்வா சம்பவ இடத்தை ஆராய்ந்தார். மீட்கப்பட்ட மனித எலும்புகளை பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார மருத்துவமனையின் நீதித்துறை மருத்துவரிடம் அனுப்ப உத்தரவிட்டார்.

மனித எலும்புகள் மற்றும் துப்பாக்கியை கண்டறிந்த பின்னர், மண்டை ஓடு மற்றும் இடுப்பு எலும்பு மற்றும் பல எலும்புகள் மற்றும் 07 பயன்படுத்தப்படாத தோட்டாக்களை மற்றொரு வெற்றுத்தரையில் புத்தளம் பிரிவு குற்றத்தடுப்பு பிரிவினர் கண்டறிந்தனர்.

பொலிஸ் தலைமையகத்தின் மத்திய ஆயுதக் களஞ்சியத்திலிருந்து முந்தல் காவல்துறையினர் பெற்ற அறிக்கையின்படி, குருவிட்ட பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சார்ஜென்ட் சுமித் (29288 *) என்பவருக்கு துப்பாக்கி வழங்கப்பட்டது.

அவர் 2020 ஒக்ரோபர் முதல் காணாமல் போயிருந்தார். இருப்பினும், இந்த இடத்தில் காணப்படும் எலும்புகள் காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தருடையதா என்பது இன்னும் கண்டறியப்படவில்லை, இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முந்தல் பொலிசார் கூறுகின்றனர்.