பாலைப்பழம் பறித்தவர்களை விரட்டியடித்த வனவளத்துறையினர்!! பூநகரியில் அநியாயம்!!

பூநகரி வீதியில் தமது வாழ்வாதாரத்துக்காக பாலைப்பழம் பறித்தவர்களை விரட்டியடித்த வனவளத்திணைக்கள அதிகாரிகள் அவர்களின் கத்திகளை பறித்துச் சென்றுள்ளனர்.
இன்று மாலை 5 மணியளவில் பூநகரி வீதியில் ஜெயபுரத்தினைச் சேர்ந்த மக்கள் பாலைப் பழம் பிடுங்கிக் கொண்டிருந்தனர்.

இதன்போது அவ்விடத்திற்கு வருகை தந்த வனவளத் திணைக்களத்தினர் பாலைப் பழம் பிடுங்க வேண்டாம் எனக் கூறி அவர்களிடமிருந்த நான்கு கத்திகளையும் பறித்துச் சென்றுள்ளனர்.
குறித்த செயற்பாட்டால் மக்கள் விசனமடைந்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் வாழ்கின்ற கூடுதலான மக்கள் சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் பாலைப் பழ சீசன் காலத்தில் பல குடும்பங்கள் பொருளாதார நிலைமை காரணமாக பாலை மரங்களின் கிளைகளை வெட்டி பழம் பிடுங்குவார்கள்.
இப்பழத்தினை வற்றலாக மாற்றுதல், பாணி காய்ச்சுதல், உடன் உண்ணுதல், வியாபாரம் செய்தல் என்பது காலம் காலமாக இடம் பெற்று வருவது.
பாலை மரங்களின் கிளைகளை வெட்டுதல், மரங்களை வெட்டுவதாக அமையாது. பொருளாதார நெருக்கடியில் ஜெயபுரம் மக்கள் வியாபாரத்துக்கக இன்றும் பாலைப் பழம் பிடுங்கிக் கொண்டிருந்த போது அம் மக்களின் கத்திகளை வனவளத் திணைக்களத்தினர் எடுத்துச் சென்றுள்ளனர்.
கிளிநொச்சி பகுதியில் நாளாந்தம் பல நூறு பாலை மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படுவது தொடரும் நிலையில் கண்முடிக்கிடக்கும் வனவளத் திணைக்கள அதிகாரிகளுக்கு வறுமையை போக்க பாலைப் பழம் பறிப்பதை தடுக்க வாகனங்களில் ஓடிவருவது வேடிக்கையாக உளட்ளதாக சமூக நலன்விரும்பிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பிரதேச சபையின் உறுப்பினர் சி.சிறிரஞ்சன் தெரிவசிக்கையில்,
பூநகரி பிரதேசத்தில் மரங்களை களவாக வெட்டிச் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்காத வனவளத் திணைக்களத்தினர் தமது குடும்ப பொருளாதார நிலைமை காரணமாக பாலைப் பழம் பிடுங்கச் சென்றவர்களின் கத்திகளை எடுத்துச் சென்றமை ஏற்றுக் கொள்ள முடியாதது. இது கண்டனத்திற்குரியது எனவும் பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்தார்.