திருமணம் செய்தால் பிரிந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் தூக்கில் தொங்கிய இரட்டை சகோதரிகள்!

திருமணம் செய்தால் பிரிந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் இரட்டை சகோதரிகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் மண்டய மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா ஹுனசானஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்- யசோதா தம்பதி. இந்த தம்பதிக்கு தீபிகா, திவ்யா என்ற 19 வயதான மகள்கள் இருந்தனர்.

இவர்கள் 2 பேரும் இரட்டை சகோதரிகள். இதனால் சிறு வயதில் இருந்து இருவரும் ஒருவருக்கு ஒருவர் அதீத அன்பு செலுத்தி வந்துள்ளனர்.

இவர்கள் 2 பேரும் மண்டியாவில் உள்ள ஒரு பாலிடெக்னிக்கில் இறுதி ஆண்டி டிப்ளமோ படித்து வந்தனர். இவர்கள் 2 பேருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர்.

இதற்காக அவர்கள் வரன் தேடி வந்தனர். ஆனால் இருவருக்கும் திருமணம் செய்து கொள்ள பிடிக்கவில்லை என்றும், திருமணம் செய்தால் இருவரும் தனித்தனியாக பிரிந்து சென்று விடுவோம் என இருவரும் கருதினர்.

திருமணமாகி தனித்தனியாக செல்வதை காட்டிலும் இருவரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என தீபாகவும், திவ்யாவும் முடிவு செய்துள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு இருவரும் தனித்தனி அறைகளில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

இதுகுறித்து அரகெரே பொலிஸார் விரைந்து வந்து, தற்கொலை செய்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர்.

பொலிஸ் விசாரணையில், திருமணமானால் இருவரும் தனித்தனியாக பிரிந்துவிடுவோம் என கருதிய தீபிகாவும், திவ்யாவும் தற்கொலை செய்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக அரகெரே பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.