மட்டக்களப்பில் இரு தினங்களில் 7339 கொரோனா தடுப்பூசிகள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாவது நாளாக இன்றும்(வியாழக்கிழமை) பல்வேறு பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் 7339 கொரோனா தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும் இன்று தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட புன்னைச்சோலை கலாசார மண்டபத்தில் இன்று காலை முதல் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மாமாங்கம் பொதுச்சுகாதார பரிசோதகர் நிரோசன் தலைமையில் இந்த கொரோனா தடுப்பு ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இன்றைய தினமும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டதுடன் பெருமளவானோர் ஆர்வத்துடன் தங்களுக்கான தடுப்பூசிகளை ஏற்றிச்செல்வதை காணமுடிகின்றது.