கிளிநொச்சியில் உயிரை காவு கொண்ட சட்ட விரோத மணல் அகழ்வு!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சுமார் மூன்று வருடங்களுக்கு மேலாக இவ்வாறு  சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாகவும், இதனால் வீதிகள், விவசாய நிலங்கள் என்பன பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கின்றனர்.

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்படும் கனரக வாகனங்களின்  போக்குவரத்து அதிகரித்தமையினால் வீதிகள் மிக  மோசமான  நிலையில் உள்ளதால், பொது மக்கள் அவசர  தேவைகளின் போது  சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

அண்மையில் நோயுற்ற முதியவர் ஒருவரை வைத்தியசாலைக்கு அழைத்து செல்வதற்கு வந்த அம்பியூலன்ஸ் வண்டி வீதியின் மோசமான நிலையின் காரணமாக, குறித்த பகுதிக்கு  செல்லமுடியாத நிலையில், உறவினர்களால் நோயுற்ற முதியவர் வண்டி இருக்கும் இடத்துக்கு தூக்கி வரப்பட்ட போது இடையில் நோயுற்ற முதியவர் மரணமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே தங்கள் பிரதேசத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வினை தடுத்து நிறுத்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.