நவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்

யாழ்ப்பாணம்- நவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட தூபிக்கு முன்பாக எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினர். கடந்த 1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் திகதி, நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தின் மீது விமான படையினர் வீசிய குண்டு வீச்சில், இடம்பெயர்ந்து தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்த குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 147க்கும் அதிகமான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட குறித்த நினைவு தூபியிலேயே, நேற்று (வெள்ளிக்கிழமை) மலர்தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். இதன்போது குறித்த பகுதியில் பெருமளவான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.