பையில் வெடிகுண்டு இருப்பதாக கூறிய கனேடியரால் விமான நிலையத்தில் பரபரப்பு!

ப்ளோரிடா விமான நிலையத்தில் வரிசையில் நின்ற ஒருவர், தன் பையில் வெடிகுண்டு ஒன்று இருப்பதாக கூறியதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ரொரன்றோவைச் சேர்ந்த Wegal Rosen (74), கனடா திரும்புவதற்காக Fort Lauderdale விமான நிலையத்தில் வரிசையில் நின்றுகொண்டிருந்தார்.

இதன்போபோது அவர் தன்னுடைய பையில் ஒரு வெடிகுண்டு இருப்பதாகக் கூற, உடனே அங்கு குவிந்த பொலிசார், மக்களை பாதுகாப்பாக வெளியேற்றியதுடன், விமான நிலையம் நோக்கிவரும் போக்குவரத்தையும் தடை செய்தனர்.

இதன் காரணமாக எட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட, 50 விமானங்கள் புறப்பாடு தாமதமாயிற்று.

அதன் பின்னர் Rosenஐக் கைது செய்த பொலிசார், அவரது பையை கவனமாக சோதனையிட்டபோது அதற்குள் இருந்தது… CPAP என்னும் மருத்துவ உபகரணம். Rosenக்கு, sleep apnea என்னும் தூங்கும்போது மூச்சுவிடுதல் தடைபடும் பிரச்சினை இருந்திருக்கிறது. அதற்கான சிகிச்சைக்கான CPAP என்னும் மருத்துவ உபகரணத்தைத்தான் அவர் தன் பையில் வைத்திருந்திருக்கிறார்.

தனது லக்கேஜை சோதனையிடுவதற்கு பெரும் தொகை செலுத்தவெண்டியிருந்ததாலும், இதய நோய் நிபுணர் ஒருவரை சந்திக்க கனடா திரும்ப தாமதமாகிக்கொண்டிருந்ததாலும் மன அழுத்தத்திற்குள்ளான Rosen, எரிச்சலில் தன் பையில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறிவிட, விமான நிலையமே பரபரப்பானது.

இதனையடுத்து வெடிகுண்டு இருப்பதாக பொய் சொன்ன Rosen கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் 15 ஆண்டுகள் சிறையில் செலவிட நேரிடும் என்பதுடன் , 10,000 அமெரிக்க டொலர்கள் அபராதமும் அவர் செலுத்தவேண்டியிருக்கும்.

இந்த நிலையில் 20,000 அமெரிக்க டொலர்கள் ஜாமீனில் அவரை விட சம்மதித்த நீதிபதி, கண்டிப்பாக அவர் மீண்டும் Fort Lauderdale விமான நிலையம் வழியாக ரொரன்றோவுக்கு செல்லக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.