தாயகத்தில் மரணித்த சிறுவர்களை நினைவுகூருவது தவறா?

விடுதலைப் புலிகள் சிறுவர்களையும் அவர்களது இயக்கத்தில் சேர்த்தார்கள். ஆனால் மரணமான அச்சிறுவர்களின் பெற்றோர் அவர்களை ஏன் நினைவு கூர முடியாது? என கேள்வி எழுப்பியுள்ளார் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளரும், சமூகசேவைகள் செயற்பாட்டாளருமான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட, ‘மனித உரிமை மீறல்கள் ஜனாதிபதி ஆணைக்குழு’ நடத்திய மூன்றாவது அமர்வு கடந்த 14.07.2021 அன்று பி.எம்.ஜ.சி.எச் மண்டபத்தின் துலிப் கூட்ட அறையில் நடைபெற்றது.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மனித உரிமை மீறல் ஆணைக்குழுவின் தலைவரும், உயர்நீதிமன்ற நீதியரசருமான திலீப் நவாஸ் தலைமையில் இந்த அமர்வு நடைபெற்றது.

இந்த அமர்வின் போது மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளரும், சமூகசேவைகள் செயற்பாட்டாளருமான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவும் அழைக்கப்பட்டிருந்தார்.

ஆணைக்குழுவின் உறுப்பினரான முன்னாள் பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ மற்றும் ஏனைய 3 உறுப்பினர்களுடன், சட்ட அலுவல்கள் திணைக்களத்தின் சட்ட அலுவலர்கள் இருவரும் அங்கு சமுகமளித்திருந்தனர். இங்கு சாட்சியமளித்த கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து,

ஒரு நாடு, ஒரு சட்டம் என்றால் தெற்கில் ஜே.வி.பி காலத்தில் படையினரால் கொல்லப்பட்ட ஜே.வி.பியினரை நினைவு கூர முடியுமென்றால் ,ஏன் தமிழ் மக்களுக்கு அவ்வாறு முடியாது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.