சுவிஸில் தடுப்பூசி போடாதவர்களுக்கு அலுவலகங்களில் கட்டுப்பாடுகள்

சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு குறிப்பிட்ட சில அலுவலகங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த கட்டுப்பாடுகளால் பாதிப்புக்குள்ளானதாக கூறும் இருவர் உள்ளூர் பத்திரிகை ஒன்றில் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். சூரிச் பகுதியில் பணியாற்றும் 39 வயது பெண் ஒருவர், தமக்கு ஏற்பட்ட அனுபவத்தை குறிப்பிடுகையில்,

குறைந்தது 100 பேர் பணியாற்றும் தங்கள் அலுவலகத்தில், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத காரணத்தால் தமக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அதன்படி மதிய உணவின் போது, அனைவருடனும் ஒன்றாக சாப்பிட அனுமதி இல்லை எனவும், பணியாற்றும் பகுதியிலேயே உணவை எடுத்துக்கொள்ள நிர்வாகம் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாள் முழுவதும் FFP2 மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும் எனவும், ஆனால் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மாஸ்க் அணிய தேவை இல்லை என நிர்வாகம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த பாகுபாடு தமக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாக கூறும் அவர், தாம் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுக்கவில்லை எனவும், ஆனால் தனிப்பட்ட சில காரணங்களால் பின்னர் போட்டுக்கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று ஆர்காவ் பகுதியில் பணியாற்றும் 26 வயது பெண் ஒருவரும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என அலுவலகத்தில் அறிவுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தாம் முதல் டோஸ் போட்டுக்கொண்ட நிலையில் இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தனிப்பட்ட உரிமைகளுக்கு எதிராக செயல்பட நிறுவனங்களுக்கு அதிகாரம் இல்லை என Unia திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மேலும் சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி கட்டாயம் என்ற போதும் தனிப்பட்ட தரவுகளை நிறுவனங்கள் திரட்டுவதை அனுமதிக்க முடியாது என Unia சுட்டிக்காட்டியுள்ளது.