யாழ்.காங்கேசன்துறை வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டு கொடூரம்!

யாழ்.காங்கேசன்துறை வீதியில் கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகாமையில் உள்ள கடையொன்றின் மீது அடாவடி குழுவினர் சிலர் தீமுட்டியுள்ளனர். இதனால் குறித்த பகுதியில் பதற்றநிலை நிலவி வருகின்றது.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கடை உரிமையாளரும் அவரது மனைவியும் மனைவியாரது தம்பியும் கடையிலிருந்து தமது கடையின் பின்புறத்தே உள்ள வீட்டிற்கு கடையில் உள்ள பொருட்களை கொண்டு சென்ற நேரம் கடை முன்பாக வந்த அடாவடி குழுவினர் பெற்றோல் போத்தலை எறிந்து தீமூட்டியதுடன் கடை உரிமையாளரின் மனைவியின் மீது வாளால் வீச முற்பட்டுள்ளனர்.

இருப்பினும் தெய்வாதீனமாக குறித்த பெண் எதுவித காயமுமின்றி தப்பித்துள்ளார். அலறல் சத்தத்தையறிந்து கடையின் பின்புறம் நின்றவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முற்பட்டபோது தீக்காயமும் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த யாழ்ப்பாண பொலிஸ் தலைமையக பொறுப்பாதிகாரி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

இச்சம்பவத்தால் கொக்குவில் பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து அப் பகுதியில் பெருமளவு பொலிஸாரும் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.