பவர் ஸ்டாருடன் வனிதாவுக்கு திருமணம்?

பவர் ஸ்டார் சீனிவாசனுடன் வனிதா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர, அது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நட்சத்திர தம்பதிகளான விஜய குமார் – மஞ்சுளா ஆகியோரின் மூத்த மகளான வனிதா, நடிகர் விஜய்யின் சந்திரலேகா படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

பின்னர் ஆகாஷ் என்ற சின்னத்திரை நடிகரை திருமணம் செய்து திரையுலகத்தை விட்டு விலகினார். இருவருக்கும் ஒரு மகன் இருக்கும் நிலையில் ஆகாஷை விவாகரத்து செய்து, தெலங்கானாவைச் சேர்ந்த ஆனந்த் ஜெயராஜன் என்ற தொழிலதிபரை இரண்டாவதாக திருமணம் செய்தார். இந்தத் திருமணமும் விவாகரத்தில் முடிந்தது.

அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு பிரபலமானார். தற்போது சில விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். இது மட்டுமில்லாமல், யூடியூபில் சமையல் தொடர்பான விடியோக்களைப் பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் போன வருடம் பீட்டர் பால் என்பவரை கிறிஸ்துவ முறைப்படி மிக எளிமையாகத் திருமணம் செய்தார். இந்த திருமணத்துக்கு பீட்டர் பாலின் முதல் மனைவி, தன்னை விவாகரத்து செய்யமால் எப்படி இன்னொரு திருமணம் செய்யலாம் என காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்த விவகாரம் கடந்த வருடம் கரோனா குறித்த செய்திகளை விட அதிகம் கவனம் பெற்றது.

வனிதாவுக்கும் பீட்டர் பாலுக்கும் நடந்த திருமணம் குறித்து நடிகைகள் கஸ்தூரி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோர் விமர்சிக்க, அது என்னுடைய தனிப்பட்ட விருப்பம், நீங்கள் யார் கேட்பதற்கு என வனிதா பதிலடி கொடுக்க சமூக வலைதளங்கள் பற்றி எரிந்தது. இந்த விவகாரம் குறித்து, வனிதா, லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரி ஆகியோர் சில யூடியூப் சேனல்களுக்கு கொடுத்த பேட்டிகளில் ஒருவரையொருவர் கடுமையாக விமரிசித்துக்கொண்டனர். இதனையடுத்து பீட்டர் பாலை பிரிவதாக வனிதா அறிவித்ததும் ஒரு வழியாக இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது.

ஆனால் அதுவும் சிறிது நாட்களுக்குத் தான். கடந்த சில மாதங்களுக்கு முன் நான்காவதாக தொழிலதிபர் ஒருவரை வனிதா திருமணம் செய்யப்போவதாக செய்திகள் வெளியாக, மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஆனால் அந்தத் தகவல்கள் உண்மையில்லை என்று வனிதா முற்றுப்புள்ளி வைத்தார்.

ஆனால் தற்போது வனிதாவே, பவர் ஸ்டார் சீனிவாசனுடன் திருமண கோலத்தில் இருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இது உண்மையா ? அல்லது ஏதாவது திரைப்படத்துக்காகவா? என ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன.. இந்த கேள்விகளுக்கு விரைவில் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.