யாழ் ஆலயம் ஒன்றில் இராணுவத்தினர் தொடர்பில் மக்கள் அதிருப்தி!

யாழ்ப்பாணம்- அச்சுவேலியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தில் இராணுவத்தினர் வழிபாடுகளை மேற்கொண்டதுடன் சாமியையும் காவி உள்ளதாக கூறப்படுகின்றது.

ஆலயங்களில், மேலங்கிகளுடன் ஆண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இராணுவத்தினர் குறித்த ஆலயத்திலுள்ள வில்லு மண்டபம் வரை மேலங்கிகளுடன் சென்று வழிபட்டமைக்கு பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அச்சுவேலி- உலவிக்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்தா அலங்கார உற்சவம் தற்போது நடைபெற்று வருகின்றது. எனினும் நேற்று நடைபெற்ற தேர்த்திருவிழாவின்போது பஞ்சமுக பிள்ளையார், சிறிய தேரில் எழுந்தருளி, உள்வீதி உலா வந்தார்.

இதன்போது எழுந்தருளி பிள்ளையாரை இராணுவத்தினர் பிள்ளை தண்டில் காவி உள்வீதி உலா வந்தனர். நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் பலரும் ஆலயத்திற்குள் உள்நுழைய அனுமதிக்கப்படாத நிலையில், இராணுவத்தினர் பலர் ஆலயத்தினுள் சென்று வழிபாடுகளை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் ஆலயத்திற்கு அருகில் வசிப்போர் கூட வெளியே நிற்க, இராணுவத்தினர் ஆலயத்தினுள் சென்று வழிபாடுகளை மேற்கொண்டு சுவாமி காவியமை, பல வருடங்களாக வழிபாடு செய்து வரும் அடியவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.