ஜேர்மனியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி யாழ் குடும்பஸ்தர் பலி!

ஜேர்மனியில் அண்மையில்ஏற்பட்ட பெரும் வெள்ளப் பெருக்கு அனர்த்தத்தில் சிக்கி, ஈழத் தமிழ்
இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

பெரும் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்ட வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாகாணத்தின்
euskirchen என்ற இடத்தில் வசித்து வந்த இரண்டு பிள்ளைகளது தந்தையான இராசரத்தினம்
இலக்குமணன் (36) என்ற இளம் குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்.

கடந்த 15 ஆம் திகதி அவர் வெள்ளத்தில் சிக்குண்டார் என்பது தெரியவந்துள்ளது.

வீட்டில் தனித்திருந்த சமயம் வெள்ளம் பெருகி வருவது கண்டு அவர் தனது முக்கிய சில
ஆவணங்களை எடுத்துக்கொண்டு பாதுகாப்புத் தேடுவதற்காக வீட்டுக்கு வெளியே ஓடிவந்தார் என்றும்
அச்சமயம் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட கார் ஒன்றுடன் மோதுண்ட அவர் பின்னர் காணாமற் போனார்
என்றும் சம்பவத்தை நேரில் கண்ட சிலர் கூறியுள்ளனர்.

வெள்ளப் பகுதி ஒன்றில் இருந்து மறுநாள் அவரது சடலம் கண்டெடுக்கப்
பட்டது. அவரது கையில் பச்சை குத்தி இருந்தமையால் அதன் மூலம் சடலம் அடையாளம் காணப்பட்டது.

ஜேர்மனியில் வெள்ளம் பாதித்த மேற்குப் பகுதிகளில் பல தமிழர்களும் சிக்குண்டனர் என்ற தகவல்
ஏற்கனவே வெளியாகி இருந்தது. எனினும் அங்கு நேர்ந்த ஓர் உயிரிழப்பு பற்றிய
உறுதிப்படுத்தப்பட்ட முதல் தகவல் இதுவாகும்