புதுமணப்பெண்னை வரதட்சணை கேட்டு மாமனார் முன்னிலையில் நிர்வாணப்படுத்தப்பட்டு அரங்கேறிய அவலம் – இளம் பெண் தற்கொலை

புதுமணப்பெண்னை வரதட்சணை கேட்டு கணவர் வீட்டார் கொடுமைப்படுத்தியதோடு, மாமனார் முன்னிலையில் நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்தியதால் மனமுடைந்த இளம் பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ராஜஸ்தானில் நடந்தேறியுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த விஸ்மயா என்ற பெண் அண்மையில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. இந்த நிலையில் இதுபோன்ற சம்பவம் ஒன்று ராஜஸ்தானிலும் தற்போது அரங்கேறியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பாகூரை பகுதியைச் சேர்ந்த 18 வயதான பிரியாவுக்கு கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் நடைபெற்ற 20 நாட்களுக்கு பின்னர் வரதட்சணை கேட்டு பிரியாவை அவரது மாமனார் , மாமியார் ஆகியோர் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

பிரியாவை அடித்து காயப்படுத்தியும் உள்ளனர். இதையடுத்து பிரியா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், கணவர் மற்றும் அவரது பெற்றோர் பிரியாவை சமாதானப்படுத்தி மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.

இந்தநிலையில் வரதட்சணை கொடுமை மீண்டும் தொடர்ந்துள்ளது. கடந்த ஜூலை 20ஆம் திகதி வரதட்சணை கேட்டு பிரியாவை அவரது மாமனார், மாமியார் ஆகியோர் அடித்து உதைத்துள்ளனர். இதனால் வேதனை அடைந்த பிரியா ஜூலை 22ஆம் திகதி பாத்திரங்கள் கழுவும் விம்மை அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக இவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி பிரியா உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், தனது தற்கொலைக்கான காரணம் தொடர்பாக பிரியா வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோ பதிவில் வரதட்சணை கேட்டு தனது மாமனார், மாமியார் ஆகியோர் உடல் ரீதியாக பல்வேறு கொடுமைகளை செய்ததாக தெரிவித்துள்ளார். மேலும், வரதட்சணை கேட்டு தனது மாமனார் முன்னிலையில் ஒரு ஒட்டுத் துணி கூட இல்லாமல் நிர்வாணப்படுத்தப்பட்டதாகவும், அதன் காரணமாகவே “விம்” அருந்தி தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளதாக, பிரியா தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பிரியாவின் கணவர், மாமனார், மாமியார் உட்பட 9 பேர் மீது பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.