வரதட்சணை கொடுமை காரணமாக 19 வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

தமிழகத்தில் திருமணம் முடிந்து 8 மாதங்களே ஆன நிலையில், வரதட்சணை கொடுமை காரணமாக 19 வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்து உள்ள பனையூர் பகுதியை சேர்ந்தவர் பிரமோத். (வயது 25) இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கும் சோலையூர் ரங்கநாதன் தெருவை சேர்ந்த சினேகா (வயது 19) என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில், பிரமோத் கடந்த சில மாதங்களாக மனைவி சினேகாவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இரு வாரத்துக்கு முன்பாக சினேகா, பிரமோத்துடன் கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது.

இந்நிலையில் பிரமோத் தொலைபேசியில் சினேகாவுடன் சண்டையிட்டுள்ளார், இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சினேகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விவரம் அறிந்து விரைந்து வந்த போலீசார், சினேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பிரமோத் மீது சினேகாவின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் அவரிடம் விசாரணையை தொடங்கியுள்ளனர்.