கொரோனாவைக் குணப்படுத்தும் புதிய வகை மருந்தை அறிமுகப்படுத்தியுள்ள கனேடிய நிறுவனம் ஓன்று!

கொரோனாவை தடுக்கும் மற்றும் குணமாக்கும் ஸ்பிரே ஒன்றினை கனேடிய நிறுவனமான SaNOtize நிறுவனத்துடன் இணைந்து, இந்திய நிறுவனமான Glenmark அறிமுகம் செய்ய உள்ளது.

Nitric Oxide Nasal Spray (NONS) என்று அழைக்கப்படும் ஸ்பிரே வடிவிலான இந்த மருந்து (nasal spray), இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஹொங்ஹொங், தைவான், நேபாளம், புரூனே, கம்போடியா, லாவோஸ், மியான்மர், Timor-Leste மற்றும் வியட்நாம் ஆகிய ஆசிய நாடுகளில் தயாரிக்கப்படவும், விநியோகிக்கப்படவும் உள்ளது.

இந்த மருந்து, நோய் வரும் முன் பயன்படும் தடுப்பு மருந்தாகவும், நோய் வந்தபின் ஆரம்ப கட்டத்தில் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்தாகவும் பயன்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த மருந்து, திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ்களுக்கு எதிராகவும் செயல்பட வல்லது என கூறப்படுகிறது.

பிரித்தானியா மற்றும் கனடாவைச் சேர்ந்த தன்னார்வலர்களும் இந்த மருந்தின் மருந்தியக்கச் சோதனைகளில் பங்கேற்றுள்ளார்கள். Glenmark நிறுவனம், இந்தியாவில் இந்த மருந்தின் அடுத்தகட்ட மருந்தியக்கச் சோதனைகளை மேற்கொள்ள இருக்கும் நிலையில், 2021ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களுக்குள் இந்த மருந்து பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.