காணாமல் போன பெண்ணொருவரின் சடலம் சாக்கு பைக்குள் இருந்து மீட்பு!

வாழைச்சேனையில் காணாமல் போன பெண்ணின் சடலம் சாக்கு பைக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கடை ஒன்றிற்குள் இருந்த சாக்கு பைக்குள்ளேயே இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பெண் காணாமல் போயிருந்ததாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

வங்கி ஒன்றுக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ள நிலையில் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வர்த்தக நிலையத்தில் இரண்டு சாக்கு பைகள் உள்ளதென பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் அதனை சோதனையிட்டுள்ளனர். அதில் ஒரு பையில் உரமும் மற்ற பையில் சடலமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கடையின் உரிமையாளர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பெண்ணின் பிரேத பரிசோதனை இன்றைய தினம் இடம்பெறவுள்ளதென பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.