எலும்புத் துண்டுகளுக்கு சோரம்போன துரோகிகளை நாங்கள் என்றுமே மன்னிக்கமாட்டோம்!

“எலும்புத் துண்டுகளுக்கு சோரம்போன துரோகிகளை நாங்கள் மன்னிக்கமாட்டோம்” என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அந்தச் சங்கத்தின் உறுப்பினர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தகவல் வழங்கும்போது, “கடந்த 12 வருடங்களாக எங்களது உறவுகளைத் தேடும் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றோம்.

இந்நிலையில் சில நிறுவனங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பதிவுகளை புத்தகம் வெளியிடப்போகின்றோம் என கூறிப்பெற்றுக்கொண்டு அதனை விற்பனை செய்து பணம் சம்பாதிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளன.

எலும்புத்துண்டுக்கு விலைபோகும் எங்களது சில உறவுகள், இதனை பணத்துக்கு விற்பனை செய்கின்றனர்.

மேலும் சில அமைப்புகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களாக இல்லாதவர்களை ஜனாதிபதியிடம் அழைத்துச்சென்று எங்களது போராட்டத்தினை கொச்சைப்படுத்த முயற்சிக்கின்றனர்.

ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து காணாமல்போன எங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்கு முயற்சிக்கமாட்டோம்.

எங்களது போராட்டத்திற்கு எங்களுடன் இணைந்து தோள் கொடுக்குமாறு சர்வதேச நீதிமன்றுக்கும் ஐ.நா.சபைக்கும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

மேலும் எங்களது விபரங்களை தேடி அரசாங்கத்திற்கு விற்பனை செய்துள்ளார்கள். அவர்களை நாங்கள் கண்டிக்கின்றோம். அவர்கள் எலும்புத்துண்டுக்கு சோரம்போனவர்கள்.

எதிரியை மன்னித்தாலும் துரோகியை மன்னிக்கமாட்டோம். அவர்களை எங்கள் போராட்டத்திலிருந்து ஒதுக்கிவைத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளனர்.