மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 5 பேர் உயிரிழப்பு- புதிதாக 266 பேருக்கு கொரோனா

மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதுடன் புதிதாக 266 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் அச்சுதன் தெரிவித்துள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மட்டக்களப்பில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும், களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும் கடந்த 24 மணித்தியாலயத்தில் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் 1,679 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்றமையினால், பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதனை தவிர்த்துக்கொள்ள வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.