நல்லூரான் கொடிச்சீலை கையளிக்கப்பட்டது!

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று (12) சம்பிரதாய பூர்வமாக இடம்பெற்றது.

நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை, செங்குந்தர் பரம்பரையினரால் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும்.

அதன் படி யாழ். சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் காலை 9 மணிக்கு இடம்பெற்ற விஷேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து அங்கிருந்து கொடிச்சீலை மாட்டுவண்டிலில் பருத்தித்துறை வீதி வழியாக எடுத்து வரப்பட்டு காலை 10 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினை வந்தடைந்தது.

சுபநேரத்தில் பூஜைகள் இடம்பெற்று கொடிச்சீலை நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.

நாளை காலை பத்து மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பம் ஆகும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.