யாழ் சாவகச்சேரியில் மேலும் 18 பேருக்கு கொரோனா!

தென்மராட்சி – சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இன்று (14) 68 பேருக்கு அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சாவகச்சேரி தனியார் நிறுவன ஊழியர், கொடிகாமம் மீன் சந்தை வியாபாரி, வெளிமாவட்டங்களில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்கள், இலங்கை போக்குவரத்துச் சாலை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என 18 பேர் இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருப்பதாக சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தென்மராட்சி பிரதேசத்திற்கு உட்பட்ட கொடிகாமம், சாவகச்சேரி, வரணி, எழுதுமட்டுவாழ் பகுதிகளில் கொரோனா அபாய நிலை அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றாளர்கள் மற்றும் கொரோனா மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் தேவையற்ற நடமாட்டங்களை தவிர்ப்பதுடன், அத்தியாவசியமான பயணங்களின் போது சுகாதார அறிவுறுத்தல்களை இறுக்கமாக பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.