இலங்கையில் கொவிட் தாண்டவம் – கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகே சவப்பெட்டிகளுடன் காத்திருக்கும் உறவினர்கள்!

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகே வோட் பிரதேச வீதியில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மிகக் குறைவான செலவில் அமைக்கப்பட்ட சவப்பெட்டிகளுடன், தேசிய வைத்தியசாலைக்கு அருகே மக்கள் உடல்களை பொறுப்பேற்க காத்திருப்பதாக அந்த புகைப்படத்தை பதிவிட்ட நபர் குறிப்பிட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்த அந்த நபர் தனது பேஸ்புக் பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“இது நேற்று மாலை 4 மணியளவில் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் போது நான் எடுத்த புகைப்படம். இது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிணவறைக்கு முன்பாக எடுத்த படம்.

மிகக் குறைவான செலவில் அமைக்கப்பட்ட சவப்பெட்டிகள் முச்சக்கர வண்டிகளில் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த வகையான சவப்பெட்டிகள் அரசாங்கத்தால் கொடுக்கப்படவில்லை. எனது அலுவலகம் ஒரு மூலையில் உள்ளது.

நான் சில சமயங்களில் அலுவலகத்தின் பால்கனியில் இருந்து தேசிய வைத்தியசாலையின் பிணவறையைப் பார்க்கிறேன். ஏழை மக்கள் பிணவறை முன் தினமும் அழுகிறார்கள். சிலர் தரையில் அமர்ந்து அக்கம்பக்கத்தில் மரங்களைக் கட்டி பிடித்து அழுகிறார்கள்.

கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய கொண்டுசெல்வதற்கு தினமும் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இந்த வைத்தியசாசாலையில் அம்புலன்ஸ் மட்டுமே வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன,

எதிர்காலத்தில் இது போன்ற ஒரு சிறிய சவப்பெட்டியில் கூட இறுதி பயணத்தை மேற்கொள்ள உங்களுக்கு வாய்ப்பில்லை. ஒரு வேளை நீங்கள் பொலிதீன் பையில் போர்த்தியபடி அந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.” என குறிப்பிட்டுள்ளார்.