கோமாளிகள் நாட்டை ஆளுகின்றனர்- சாணக்கியன் பாராளுமன்றில் காட்டம்

கோமாளிகள் ஆட்சி செய்யும் நிலையில், இவர்கள் அனைவரும் சேர்ந்து நாட்டு மக்களை பலி கொடுத்து விட்டனர். தற்போது காபூலில் மக்கள் நாட்டை விட்டு தப்பி செல்வதை போன்று எதிர்காலத்தில் இலங்கையிலும் தமிழ், சிங்கள முஸ்லிம் மக்கள் நாட்டை விட்டு தப்பி செல்லும் நிலை உருவாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சபையில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (17) செவ்வாய்க்கிழமை, வைரஸ் தொற்று சட்டமூலத்தின் இரண்டம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்.

தற்போது அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை பார்க்கும்போது சீட்டுக் கட்டு விளையாட்டு நினைவுக்கு வருகிறது. இதில் கோமாளிகள் இரண்டும் இருக்கும். அந்த இரண்டு கோமாளிகளையும் ஒதுக்கிவிட்டே சீட்டுக்கட்டு பிரிக்கப்படும்

அதேபோன்று தான் தற்போது அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தனது அமைச்சு மாற்றப்பட்டதற்காக ஒப்பாரி வைக்கின்றார். அவருக்கே தெரியாது அவரது அமைச்சுப் பதவி பறிபோனதாக தெரிவிக்கின்றார். கோமாளிகளே இவ்வாறான தீர்மானம் எடுத்துள்ளனர். இந்த நாட்டை ஆட்சி செய்வதும், தீர்மானங்கள் எடுப்பதும் கோமாளிகள் என்றே கூற வேண்டும்.