மது போதையில் சென்ற பொலிஸார் வீட்டின் மீது தாக்குதல்!

தலைமன்னார் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) இரவு 10 மணி அளவில் மது போதையில் சிவில் உடையில் சென்ற தலைமன்னார் பொலிஸார் குறித்த வீட்டை உடைத்து சேதப்படுத்தியமை மற்றும் அப்பகுதியிலுள்ள பல வீடுகளுக்குச் சென்று அச்சுறுத்தியமை தொடர்பாக பாதிக்கப்பட்ட 7 குடும்பங்கள் ஒன்றிணைந்து தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸாருக்கெதிராக முறைப்பாடு செய்துள்ளனர்.

மேலும் குறித்த முறைப்பாடு இன்று புதன் கிழமை (18) மதியம் வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் மற்றும் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு போன்றவற்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 15 பொலிஸார் மது போதையில் சிவில் உடையில் சென்று குறித்த வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தி குறித்த வீட்டை உடைத்து சேதப்படுத்தியதோடு,மேலும் அப்பகுதியில் உள்ள 6 வீடுகளுக்குச் சென்று வீட்டில் உள்ளவர்களை அச்சுரூத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கடந்த 10ம் திகதி தலைமன்னார் கிராம பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் இடம்பெற்ற தர்க்கத்தை தொடர்ந்து தலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒரு தரப்பினர் முறைப்பாடு செய்துள்ளனர்.

மேலும் குறித்த முறைப்பாட்டை தொடர்ந்து இரு தரப்பினரையும் அழைத்து சமரசம் பேசுவதாக போலீசார் அழைத்து ஒரு தரப்புக்கு ஆதரவாக இலஞ்சத்தை பெற்று ஒரு தரப்பினர் சார்பாக நடந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் தற்போது தலை மன்னார் பொலிஸார் ஒரு தரப்பினர் சார்பாக நடந்து கொண்டுள்ளதோடு,பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்காது இலஞ்சத்தை பெற்றுள்ளதோடு,பாதிக்கப்பட்டவர் மற்றும் அவர்களுக்கு உதவி செய்தவர்கள் என 7 குடும்பங்களின் வீடுகளுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (17) இரவு 10 மணியளவில் சிவில் உடையில் மது போதையில் சென்ற தலைமன்னார் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸார் குறித்த வீட்டை உடைத்து சேதப்படுத்தியதோடு,ஏனைய 6 வீடுகளுக்கும் சென்று அச்சுறுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிலையில் பாதிக்கப்பட்ட குறித்த குடும்பங்கள் இன்று புதன் கிழமை (18) காலை வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் மற்றும் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றிற்கு சென்று முறைப்பாட்டை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.