நாட்டை முடக்குமாறு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் ஜனாதிபதிக்கு கோரிக்கை கடிதம்

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சடுதியாக அதிகரித்து வருகின்றமையினால் மூன்று வாரங்களுக்காவது நாட்டை முடக்குவதற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அரசாங்கத்தின் 10 பங்காளிக் கட்சிளும் இவ்வாறு வலியுறுத்தியுள்ளன.

குறித்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, ‘நாட்டினை 3 வாரத்திற்காவது முடக்காவிடின் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது கடினம்.

மேலும் கொரோனா நோயாளின் எண்ணிக்கையை வைத்தியசாலைகளினால் தாங்க முடியும் அளவிற்கு குறைக்க முடியாது’ என கூறப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தில், லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண, நமது இடசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார, ஐக்கிய தேசிய மக்கள் கட்சியன் தலைவர் திரான் அலஸ், ஜாதிக நிதாஸ் பெரமுனவின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச, கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டாக்டர் ஜி.வீரசிங்க, தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் அமைச்சர் உதய கம்மன்பில, இலங்கை மக்கள் கட்சியின் தலைவர் அசங்க நவரத்ன மற்றும் கடமைகளுக்கான தேசிய அமைப்பின் தலைவர் கெவிது குமாரங்க ஆகியோர் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.