இலங்கையில் ஒரே நாளில் 200யை அண்மித்த கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 195 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களில் 98 ஆண்களும் 97 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

அதாவது, 30 வயதிற்குட்பட்ட ஒரு ஆணும் 30 வயது முதல் 59 வயதிற்கிடைப்பட்டவர்களில் 25 ஆண்களும் 18 பெண்களுமாக 43 பேரும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 72 ஆண்களும் 79 பெண்களுமாக 154 பேருமாக மொத்தம் 195 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6ஆயிரத்து 985 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் புதிதாக 3 ஆயிரத்து 835 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 81 ஆயிரத்து 812 ஆக அதிகரித்துள்ளது.

இதில், 3 இலட்சத்து 20 ஆயிரத்து 810 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 54 ஆயிரத்து 212 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.