அரசு பள்ளி வகுப்பறையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்! Video

பள்ளிக்கூட வகுப்பறையில் மாணவிக்கு, மாணவன் தாலி கட்டியுள்ளார். இதனை வீடியோ எடுத்து மற்றொரு மாணவன் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார்.

குமரி மாவட்டம்-கேரள எல்லையில் களியக்காவிளை அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் கடந்த 3-ந் தேதி அன்று பிளஸ்-2 மாணவன் ஒருவன் தன்னுடன் படிக்கும் சக மாணவிக்கு வகுப்பறையில் தாலி கட்டியுள்ளார். இதை இன்னொரு மாணவன் வீடியோ எடுத்துள்ளார்.

இந்தநிலையில் அந்த மாணவன் வீடியோவை தன்னுடைய வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் பதிவிட்டுள்ளார். இதனை அந்த பள்ளியில் உள்ள மற்ற மாணவர்கள் பார்த்ததும் வீடியோவை பதிவிறக்கம் செய்து சக மாணவர்களுக்கு உற்சாகமாக அனுப்பியுள்ளனர். இவ்வாறு பள்ளி மாணவன், சக மாணவிக்கு தாலி கட்டிய சம்பவம் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவியது.

இந்த சம்பவம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். மேலும் இதுகுறித்து பளுகல் போலீஸ் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டது.

இதற்கிடையே பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட மாணவன், மாணவி மற்றும் வாட்ஸ்அப்பில் பரவ விட்ட மாணவன் ஆகிய 3 பேரையும் அழைத்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அதிரடியாக 3 பேரையும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டனர்.

இதற்கிடையே சம்பவம் தொடர்பாக போலீசாரும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளிக்கூடம் திறந்ததால் ஏதாவது வித்தியாசமாக செய்ய நினைத்து சக மாணவிக்கு விளையாட்டாக தாலி கட்டியதாகவும், இதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். என்னை விட்டு விடுங்கள், இனிமேல் இதுபோன்றதொரு தவறு நடக்காது என அந்த மாணவன், போலீசாரிடம் கெஞ்சினான்.

இதையடுத்து மாணவியின் பெற்றோர் இந்த விஷயத்தை இதற்குமேல் பெரிதுபடுத்த வேண்டாம் என்றும், மாணவர்களிடம் எழுதி வாங்கி விட்டு அனுப்பும்படியும் போலீசாரிடம் கேட்டுக் கொண்டனர். போலீசாரும் மாணவர்களின் எதிர்காலம் கருதி அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.- source: maalaimalar