மலேசிய கடற்பரப்பில் படகு கவிழ்ந்து விபத்து! 11 அகதிகள் பலி – பலர் மாயம்….!

மலேசிய கடற்பரப்பில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 அகதிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மலேசியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஜோகர் மாகாணத்தில் அகதிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று கடலில் சென்று கொண்டிருந்தது. படகில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 60 பேர் இருந்தனர்.

இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் படகு திடீரென நீரில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் மூழ்கினர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மலேசிய கடலோர காவல் படையினர் மீட்பு படகுகளில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

அங்கு அவர்கள் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் 11 பேரை சடலமாகவே மீட்க முடிந்தது. மேலும் நீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 24 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மேலும் இந்த விபத்தில் 25 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.