மேலும் முச்சக்கர வண்டிக் கட்டணத்தை உயர்த்த முடிவு!

நாட்டில் எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப் பட்டுள்ள நிலையில், முச்சக்கர வண்டிக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டிச் சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய கட்டணத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ள தாகவும், இதற்கமைய ஒரு கிலோமீற்றருக்கு 10 ரூபாவாக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாகவும் அச் சங்கத்தின் தலைவரான சுதில் ஜயருக் தெரிவித்தார்.

அதோடு ஏறக்குறைய ஒரு தசாப்த காலமாக இதே கட்டணங்களைப் பேணியதன் விளைவாக தங்களால் இனி தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எரிபொருள் விலை அதிகரிப்பு தமக்கு மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் நிவாரணம் வழங்குவது தொடர்பாக அரசாங்கம் எந்தக் கலந்துரையாடலையும் முன்னெடுக்கவில்லை அல்லது பரிசீலிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்பதால் கட்டணத்தை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.60 ஆகவும், இரண்டாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை ரூ.50 ஆகவும் அதிகரிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். அதேவேளை நுகர்வோருக்கும் சுமை ஏற்படும் என்பதால் கட்டணங் களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.அதுமட்டுமல்லாமல் டயர்கள், எண்ணெய் உள்ளிட்ட அனைத்து உபகரணங் களின் விலையும் அதிகரித்துள்ளதாக கூறிய அவர், எவ்வாறாயினும் அரசாங்கம் தலையிட்டு முச்சக்கர வண்டிக் கட்டண உயர்வை நிறுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.