காதல் திருமணம் செய்த மகளின் தலைமுடியை பிடித்து இழுத்து சென்ற தந்தையால் பரபரப்பு!!

காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்ட 21 வயது மகளின் கழுத்தில் கிடந்த தாலியை அறுத்துப்போட்ட, தந்தை ஒருவர் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் இருந்து மகளின் தலைமுடியை பிடித்து இழுத்துச்சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது

சினிமாவில் வருவது போல வீட்டை விட்டு ஓடிச்சென்று பதிவு திருமணம் செய்து கொண்ட மகளை தலைமுடியை பிடித்து இழுத்துச்சென்ற இந்த சம்பவம் கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு ரிஜிஸ்டர் அலுவலகத்தில் அரங்கேறியுள்ளது

அங்குள்ள ஹரதலே கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பசவராஜ் நாய்கின் மகள் சைத்ரா. இவர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரா என்ற 21 வயது இளைஞரை கடந்த ஒன்றரை வருடமாக காதலித்து வந்தார்.

இவர்களது காதல் விவகாரம் இருவரது பெற்றோருக்கும் தெரியவந்த நிலையில் பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருந்தாலும் சைத்ரா தனது காதலில் உறுதியாக இருந்தார்.

இதையறிந்த பசவராஜ் நாய்க், தனது மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினார். இதையடுத்து சைத்ரா, வீட்டை விட்டு வெளியேறி காதலன் மகேந்திராவை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டார்.

இந்த நிலையில் செவ்வாய்கிழமை காலையில் வீட்டைவிட்டு வெளியேறிய சைத்ரா, தனது காதலன் மகேந்திராவை சந்தித்தார். தன்னை தந்தை விரட்டி வருவதை அரிந்த சைத்ரா காதலனின் கையை இழுத்துக் கொண்டு நஞ்சன்கூடுவில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு ஓடிச்சென்றார்.

மகேந்திராவின் நண்பர்கள், அவரது உறவினர்கள் முன்னிலையில் காதல் ஜோடி பதிவு திருமணம் செய்து கொண்டது. அதற்குள்ளாக அங்கு வந்த தந்தை பசவராஜ் நாய்க், பத்திரப்பதிவு அலுவலகத்தில் காதலனுடன் ஜோடியாக நின்ற மகளை கண்டு ஆத்திரம் அடைந்து தாக்கியதாக கூறப்படுகின்றது.

மகளின் கழுத்தில் கிடந்த மாலை மற்றும் தாலியை பிடித்து இழுத்து பறித்து தூக்கிவீசியதோடு, மகளின் கையை பிடித்து இழுத்துச்சென்றார்

தந்தையுடன் செல்ல மறுத்து கையை தட்டிவிட்ட சைத்ராவின் தலைமுடியை கொத்தாக பிடித்து இழுத்துச்சென்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

பசவராஜின் இந்த செயலை கண்டு கோபமடைந்த சிலர் , அவரை தடுத்து நிறுத்தியதோடு, அவரது பிடியில் இருந்து சைத்ராவை மீட்டு அனுப்பி வைத்தனர்

அரசு அலுவலகத்துக்குள்ளேயே அத்துமீறி நடந்து கொண்ட பசவராஜை பிடித்து போலீசில் ஒப்படைக்க முயன்ற நிலையில் அவர் அங்கிருந்து நழுவிச்சென்றார்

தனது தந்தையால் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக குற்றஞ்சாட்டிய சைத்ரா, பதிவு திருமண சான்றிதழை பெற்றுக் கொண்டு அங்கிருந்து சென்றார்

இதற்கிடையே தனது மகளை காதலன் மகேந்திரா கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டதாக நஞ்சன்கூடு போலீசில் புகார் செய்த பசவராஜ் நாய்க், தனது மகளை மீட்டு தன்னிடம் ஒப்படைக்குமாறும் கூறியிருந்தார்.

புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு தான் தெரியும் பருவ காதல், பெற்றவர்களின் பாசத்தை கூட மறக்கடிக்க செய்து விடும் என்று.!