மன்னாரில் மிகச் சிறப்பாக இடம்பெற்ற கிறிஸ்மஸ் நள்ளிரவு திருப்பலி!

உலகெங்கும் வாழும் மனிதத்தை உலகிற்கு வெளிப்படுத்திய இயேசு பிரானின் அவதாரத்தினை சிறப்பிக்கும் கிறிஸ்மஸ் பிறப்பினை முன்னிட்டு இன்று நள்ளிரவு கிறிஸ்தவ ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன.

அந்தவகையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றன. மன்னார் மாவட்டத்தின் பிரதான கிறிஸ்மஸ் நள்ளிரவு திருப்பலி மாவட்டத்தின் முதல் பேராலயமான மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் கிறிஸ்மஸ் நள்ளிரவு திருப்பலி சிறப்பாக நடை பெற்றன.

இதன்போது மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுத்தனர்.

இயேசு பிறப்பினை குறிக்கும் வகையில் நள்ளிரவு பாலன் திருச்சொரூபம் வைக்கப்பட்டது. தொடர்ந்து கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றது. குறித்த ஆரானைகளின் போது கோவிட் அச்சுறுத்தலில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்கவும் , நாட்டில் நீடித்த அமைதியும், மகிழ்ச்சியும் நிலவவும் விசேட பிரார்த்தனையும் ஆயரினால் நடாத்தப்பட்டது.

கிறிஸ்மஸ் விசேட கூட்டுத்திருப்பலியை ஆயர் அருட்தந்தையர்கள், ஆகியோர் இணைந்து ஒப்புக்கொடுத்தனர். திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அனைவருக்கும் ஆயர் மற்றும் அருட்தந்தையர்களினால் அருளாசி வழங்கப்பட்டது.

கிறிஸ்மஸ் ஆராதனையை முன்னிட்டு தேவாலயத்தில் விசேட அதிரடிப்படை, இராணுவத்தினரும், பொலிஸாரும் பலத்த பாதுகாப்பு வழங்கியிருந்தனர். மேலும் மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் நள்ளிரவுத் திருப்பலியில் கலந்து கொண்டிருந்தனர்.