சுற்றுலா சென்றிருந்த குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் யாழ்.இளைஞர் பலி!

கிளிநொச்சி – பூநகரி கௌதாரிமுனைக்கு சுற்றுலா சென்றிருந்த இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் யாழ்.ஆனைக்கோட்டையை சேர்ந்த இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

பூநகரி கௌதாரிமுனைக்கு ஆனைக்கோட்டையிலிருந்து 17 பேர் கொண்ட குழு சுற்றுலா சென்றுள்ளது.

இதன்போது குருநகரில் இருந்து படகு மூலம் மற்றொரு குழு அங்கு சுற்றுலா வந்திருந்த நிலையில் இரு குழுக்களுக்கிடையிலும் உருவான வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறியுள்ளது.

குறித்த மோதலில் ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதியை சேர்ந்த ரஞ்சன் நிரோசன் (வயது22) என்ற இளைஞன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் அம்புலன்ஸ் வண்டி மூலம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதும் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தையடுத்து குருநகாிலிருந்து படகு மூலம் அங்கு வந்திருந்த குழு தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் எஸ்.சிவபால சுப்பிரமணியம் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், வைத்தியசாலைக்கு சென்று சடலத்தையும் பார்வையிட்டுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.