ஜனவரி முதல் மீண்டும் மின்வெட்டு?

நாட்டிலுள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கு டொலரைப் பெற்றுக் கொள்ள முடியாவிட்டால், 2022 ஆம் ஆண்டில் பாரிய மின் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை எச்சரித்துள்ளது.

அதன்படி வரும் ஜனவரி 24 ஆம் திகதி வரை எரிபொருள் இருப்பு தொடர்பில் மின்சார சபைக்கு பிரச்சினை இல்லை என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளரான எம்.ஆர். ரணதுங்க தெரிவித்தார்.

இந்நிலையில் , இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நிதியை இலங்கை மின்சார சபை பெற முடியாவிட்டால், மின் உற்பத்தியில் பாரிய பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் கூறினார்.

கடந்த சில வாரங்களாக இலங்கை மின்சார சபை பல செயலிழப்புகளுடன் போராடி வருகிறது, இது நடைமுறையில் உள்ள மின்சார விநியோகத்தை பாதித்துள்ளது.

இதுவரையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமே இலங்கை மின்சார சபைக்கு எரிபொருளை இறக்குமதி செய் கடன் பத்திரங்களை வழங்குகிறது. எவ்வாறாயினும், மேலும் கடனில் எரிபொருளை வழங்க முடியாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இலங்கை மின்சார சபைக்கு தெளிவுபடுத்தியுள்ளது.

இலங்கை மின்சார சபை இரண்டு வருடங்களுக்குள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 91 பில்லியன் ரூபாவை வழங்கும் என எதிர்ப்பார்ப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவரான சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னதாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தபோது, ​​சேமிக்கப்பட்ட நிதியை சேமிக்கப்பட்ட நிதியானது திறைசேரியால் இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட்டது அத்துடன் 50 பில்லியன் ரூபாவானது அவர்களால் பணம் செலுத்த பயன்படுத்தப்பட்டது.இருப்பினும், அதன் பின்னர் கடன் சுமை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார். அதேவேளை இலங்கை மின்சார சபைக்கு கடனாக எரிபொருளை வழங்க வேண்டுமாயின், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கடன்களை பெற்றுக்கொள்ளும் நிலையில் இருக்க வேண்டும், எனினும் தற்போதைய சூழ்நிலையில் அது சாத்தியமற்றது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.