சீமெந்து தரையில் வழுக்கி விழுந்து உயிரிழந்த 19 வயது கர்ப்பிணிப் பெண்!

வீட்டில் சீமெந்து தரையில் வழுக்கி விழுந்து கர்பிணி பெண்ணாருவர் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த துயர சம்பவம் திருகோணமலை, தோப்பூர் – சின்னக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கடந்த 29 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தில் நிரஞ்சலராசா சரணிகா எனும் 19 வயதுடைய கர்ப்பிணிப் பெண்ணே இவ்வாறு மரணமடைந்துள்ளார். குறித்த பெண் சமயலறைக்குச் சென்று தண்ணீரை எடுத்துவரும்போது வீட்டின் வரவேற்பு அறையில் சறுக்கி விழுந்து மயக்கமடைந்துள்ளார்.

அதன் பின்னர் உறவினர்கள் அவரைத் தோப்பூர் பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும்போது இடையில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த பெண்ணின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.