மன்னாரில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பு சம்பவம் மயக்கம் நிலையில் பெண்….!

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தரவான் கோட்டை பகுதியில் இன்று வியாழக்கிழமை மதியம் எரிவாயு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அப் பகுதியில் வசித்து வரும் கூலி தொழிலில் ஈடுபடும் பெண் ஒருவரின் வீட்டில் மேற்படி எரிவாயு மற்றும் அடுப்பு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வெடிப்பு காரணமாக வீடு எரிந்து முற்றுமுழுதாக நாசம் அடைந்துள்ளது, சம்பவத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக பெண் மயக்கம் அடைந்த நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் வீட்டில் தனிமையில் வசிப்பதுடன் பனம் பொருள் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையிலேயே இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பெண் வசித்த முழு வீடும் எரிந்து நாசமாகியுள்ள நிலையில் அருகில் இருந்த கிராம மக்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது.

எனினும் வீட்டில் இருந்த பொருட்கள் சாம்பலாகி உள்ளது. இந்த நிலையில் மன்னார் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , நகர சபை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்திற்கு என தனியான ஒரு தீயணைப்பு ஏற்பாடு இன்மையால் இவ்வாறான பல தீ விபத்துக்கள் பாரிய சேதங்களை ஏற்பட்ட பின்னரே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.