தீ விபத்தில் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்த கர்ப்பிணி பெண் …!

இலங்கையில் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பதால் மண்ணெண்ணெய் அடுப்பு ஒன்றை புதிதாக கொள்வனவு செய்த கர்ப்பிணி தீ விபத்தில் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய 3 மாத கர்ப்பிணி பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொழும்பு மாநகர மேலதிக மரண விசாரணை அதிகாரி இரேஷா தேஷான் சமரவீரவினால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

உயிரிழந்த பெண்ணின் மரணம் தொடர்பில் 33 வயதுடைய சகோதரன் தகவல் வெளியிட்டுள்ளார். “உயிரிழந்தவர் எனது தங்கை. அவருக்கு 11 வயதுடைய மகன் ஒருவர் உள்ளார்.

மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தார். ஆரம்பத்தில் அவரது வீட்டில் எரிவாயு அடுப்பு ஒன்றே காணப்பட்டது. நாட்டில் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பதாக செய்தி வெளி வருவதால் மண்ணெண்ணெய் அடுப்பு ஒன்றை அவர் கொள்வனவு செய்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவ தினத்தன்று இரவு 10 மணியளவில் அவரது கணவர் வீட்டிற்கு வருவதற்கு முன்னர் உணவை சூடாக்க சென்றுள்ளார். இதன் போது மண்ணெண்ணெய் அடுப்பு கீழே விழுந்துள்ளது. அவர் நீளமான ஆடை அணிந்திருந்தமையினால் மண்ணெண்ணெய் கீழே சிந்தி தீ பற்ற ஆரம்பித்துள்ளது. இதனால் அவர் படுகாயமடைந்துள்ளார்.

உறங்கிக் கொண்டிருந்த மகன் தீயை அணைத்து அயலவர்களின் உதவியுடன் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு தாயை அழைத்து சென்றுள்ளார்.

அங்கிருந்து அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர் கொழும்பில் வாடகை அடிப்படையில் 21 நாட்கள் அறை ஒன்றை பெற்று தங்கையை பார்த்துக் கொண்டேன். எனினும் அவர் சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.