கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த கல்லூரி மாணவி : கதறும் உறவினர்கள்!!

புதுச்சேரியில் கடலில் குளித்து கொண்டிருந்த கல்லூரி மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சியை சேர்ந்தவர் வெங்கடஜலபதி இவரது மகள் பூமதி (18).

கோயம்புத்தூர் பிளமேட்டில் உள்ள ஒரு தனியார் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் புதுச்சேரி மாநிலத்தில் நடைபெறும் குத்துச்சண்டை (பாக்சிங்) போட்டியில் பங்கேற்க அதே கல்லூரியில் பயிலும் 17 மாணவிகள், 4 பயிற்சியாளர்களுடன் நேற்று முன்தினம் புறப்பட்டு புதுவைக்கு வந்துள்ளார்.

கொரோனா கட்டுபாடுகள் காரணமாக போட்டி ரத்தானதை அடுத்து, மாணவிகள் புதுவையில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்த்தனர்.

அதன் பின்னர் நேற்று மாலை புதுச்சேரி கடற்கரைக்கு வந்து தலைமை செயலகம் எதிரே கடலில் செயற்கை மணல்பரப்பில் இறங்கி விளையாடினர். இதில் பயிற்சியாளர் மற்றும் மாணவிகள் சிலர் கடலில் குளித்தனர்.

அப்போது கடலில் எழுந்த ராட்சத அலையில் பயிற்சியாளர் கோவையை சேர்ந்த கனேஷ்வரன் (வயது 25), மாணவிகள் அமிர்தா, பூமதி ஆகியோர் சிக்கினர்.

அவர்கள் 3 பேரும் தங்களை காப்பாற்றும்படி அபாயக்குரல் எழுப்பினர்கள். இதனை கண்டவுடன் கரையில் இருந்த சகமாணவிகள், பயிற்சியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனே அவர்களை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர். அவர்களின் சத்தம் கேட்டு அங்கிருந்த உள்ளூர்வாசிகளும் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்தவுடன் புதுவை பெரியகடை போலீசார், கடலோர காவல்படை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில் பயிற்சியாளர் கனேஷ்வரன், மாணவி அமிர்தா ஆகியோர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால் மாணவி பூமதியை கண்டுபிடிக்கமுடியவில்லை. தீயணைப்பு வீரர்கள் சில நிமிட தேடலுக்கு பின் பூமதியை மீட்டனர். உடனே அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பூமதி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக புதுச்சேரி பெரியகடை போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலில் மூழ்கி மாணவி உயிரழந்த சம்பவம் சக மாணவிகளிடையே சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.