ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்ட பொங்கல் வாழ்த்துச் செய்தி!

இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையுடன் வளமான எதிர்காலத்தை நோக்கிய எமது பயணம், பசுமை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைய வேண்டும் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

விவசாயம் செழிப்படையக் காரணமான சூரிய பகவானுக்கு நன்றி நவிலும் தைப்பொங்கல் தினம், இந்துக்களின் சிறப்புமிக்க கலாசாரம் மற்றும் மத ரீதியிலான பண்டிகையாக விளங்குகின்றது.

உலக வாழ் இந்துக்களுடன் இணைந்து இப்பண்டிகையைக் கொண்டாடும் இலங்கை வாழ் சகோதர இந்து மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

தைப்பொங்கல் தினப் பாரம்பரியக் கொண்டாட்டங்களைக் கலாசார ரீதியாகச் சிறப்பாகக்கொண்டாடுவதன் மூலம், எதிர்காலத்தில் வளமான பயிர் அறுவடைக்கு சூரிய பகவானின் ஆசீர்வாதங்களும் பாதுகாப்பும் கிடைக்கின்றன என்பதே இந்துக்களின் நம்பிக்கையாகக் காணப்படுகின்றது.

சுபீட்சத்துக்கான பிரார்த்தனைகளில் ஈடுபடும் வகையில் இந்துக்களினால் முன்னெடுக்கப்படும் சடங்குகள், காலங்காலமாக இலங்கைச் சமூகத்துடன் பின்னிப் பிணைந்திருக்கின்றன.விவசாயப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட கலாசாரத்துடன் இணைந்த அனைத்து இலங்கையர்களும், தைப்பொங்கல் தினத்தை மிகுந்த மரியாதையுடன் எதிர்பார்க்கின்றனர்.

இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையுடன் வளமான எதிர்காலத்தை நோக்கிய எமது பயணம், பசுமை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைய வேண்டும். இது, பசுமை விவசாயத்துக்கான தேசிய கொள்கைக்குப் பலன் தரும் என்பதே பெரும்பான்மையானோரின் நம்பிக்கையாக இருக்கின்றது.

அதற்கான நோக்கத்துக்கு இந்தத் தைப்பொங்கல் கொண்டாட்டம் மிகுந்த உற்சாகத்தைத் தருவதாக நான் நம்புகிறேன்.

இந்த வருடமும், சுகாதாரத் துறையின் ஆலோசனைப்படி உங்களதும் உங்கள் அன்புக்குரியவர்களதும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலேயே தைப்பொங்கலை அனைவரும் கொண்டாட வேண்டும்.

பாதுகாப்பான நாட்டின் செழிப்பு மற்றும் வளத்துக்காக அர்ப்பணித்துள்ள உங்களுக்கு, சூரிய பகவானின் ஆசீர்வாதமும் பாதுகாப்பும் எப்போதும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.